சென்னை: தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை மாலை வருமாறு அனுப்பி வைத்ததால் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் முதல்முறையாக வாக்குச்சாவடிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதன்படி, 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை அந்தந்த மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அனுப்பி வைத்திருந்தது. அதில் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட அளவான 98.5 பாரன்ஹீட்டை தாண்டி உடல் வெப்பம் இருந்ததால் சிலருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களை மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க வரலாம் என்று திருப்பி அனுப்பப்பட்டனர். சிலர் நீண்ட நேரம் வரிசையில் வெயிலில் நின்றதால் அவர்களுக்கும் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டது. அவர்கள் சிலரை மர நிழலில் நின்ற பின்பு மீண்டும் வெப்ப நிலை பரிசோதனை செய்யும் போது நார்மல் என காட்டியது. இதனால் பலர் தங்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர். ஆனாலும் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் அவர்களை வாக்குச்சாவடி ஊழியர்கள் மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் சில வாக்குச்சாவடி மையங்களில் சலசலப்பு ஏற்பட்டது. அப்படி அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருந்த வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்….