சங்கராபுரம், ஏப். 4: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சங்கராபுரம் வட்டத்தில் மட்டும் 3 – பறக்கும் படை 3 – நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சவுந்தரவல்லி பாளையம் மணிமுக்தாறு ஆற்றுப்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி வேனில் உரிய ஆவணம் இன்றி சவுந்தரவல்லி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் குணா என்பவர் எடுத்துவந்த ஒரு டன் ரேஷன் அரிசியை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஐயப்பன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினரிடம் ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சங்கராபுரம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.