சென்னை, ஏப்.6 : பேருந்து வழித்தட குறிப்புகளை வழங்கினால் பெரம்பூர் பேருந்து முனையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் திரு.வி.க.நகர் தாயகம் கவி (திமுக) கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் 1972ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் பெரம்பூரில் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து 7 என்கிற எண் கொண்ட பேருந்து பிராட்வே வரையிலும், 29என் என்கிற எண் கொண்ட பேருந்து வேளச்சேரி வரையிலும், 46எப் என்கிற எண் கொண்ட பேருந்து கோயம்பேடு வரையிலும் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டுவிட்டன. எனவே, நிறுத்தப்பட்ட அந்த பேருந்து வழித்தடங்களை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல் 164 மற்றும் 164ஜே என்ற எண் கொண்ட பேருந்துகள் மீஞ்சூர் வரை சென்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றை பொன்னேரி வரையில் நீட்டிக்க வேண்டும்.
மேலும், சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. அங்கு பணிபுரியும் இளைஞர்களின் எண்ணிக்கை திருவிக நகர் தொகுதியில் இருந்து நிறைந்து காணப்படுகிற காரணத்தினால் சோழிங்கநல்லூருக்கு நேரடி வழித்தடம் ஒன்றை உருவாக்கித் தரவேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தட குறிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அளித்தால் அதை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பெரம்பூரில் இருந்து சோழிங்கநல்லூர் வரை பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதற்கு நகர பேருந்து இயக்குகின்ற அந்த குறிப்பிட்ட கிலோ மீட்டர் இடைவெளியை தாண்டி இருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.