ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள், படகு இல்லங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாவை நம்பியுள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் தளர்வினை பயன்படுத்தி கொள்ள என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு கொரோனா ஊரடங்களில் தளர்வு அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், படகு இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் நிரம்பியுள்ள நீர் அகற்றப்பட்டு மோட்டார் படகுகளும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அனைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் இன்று 23ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.சுற்றுலா தலங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட நிலையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சுற்றுலா தலங்களின் நுழைவு வாயில்களில் சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டு பெற காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான சமூக இடைவெளியினை கடைபிடித்தல் வேண்டும். சுற்றுலாவை நம்பியுள்ள பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார நிலையினை கருத்தில் கொண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகளை முழு பொறுப்புணர்வுடன் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….