சிவகங்கை, மார்ச் 7: தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவளித்து சிவகங்கையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் இது தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர ஜானகி ராமன் தலைமை வகித்தார். செயலாளர் சித்திரைச்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் வால்மீகி நாதன், துணைச் செயலர் நிருபன் சக்கரவர்த்தி உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.