வலங்கைமான், ஜன.2: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம்பேட்டை தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த பாடை காவடி திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு படை காவடி பால் காவடி காவடி அலகு காவடி உள்ளிட்டவைகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத வகையில் பாடை காவடி திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்தவர்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைப் போன்று பாடை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
பாடை காவடி திருவிழாவை போன்று ஆவணி மாதங்களில் ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் அதிக அளவில் அம்மனை வழிபடுவர். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.