கோவை, ஜூலை 6: கோவை மாவட்டத்தில் இலவச மனை பட்டா கேட்டு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்து விட்டு, காத்திருப்பது அதிகமாகி வருகிறது. மனை பட்டாவுக்கு விண்ணப்பிக்க பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி, தாலூகா அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் மக்கள் கூட்டம் குவிகிறது. சிலர், அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து சிறிது காலம் வசித்துவிட்டு, அதே இடத்தில் பட்டா கேட்டு, அரசுத்துறை அலுவலகங்களை அணுகுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மூலமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 25 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தோராயமாக 2 ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டாக மனை பட்டா வழங்குவதில் தொய்வு நீடிக்கிறது. மாவட்ட அளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணபங்கள் நிலுவையில் இருக்கின்றன. அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி, அதை தலா 3 சென்ட் வீதம் பிரித்து, 10 நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது நிலம் கிடைக்காத காரணத்தால், விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பயனாளிகளுக்கு குறைந்தபட்ச அளவிலாவது பட்டா வழங்க வேண்டும் என்பதால், இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், அரசு விதிகளுக்கு உட்பட்டு, பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்க போதுமான இடமில்லை. இடங்களை தேடி பார்த்து கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. இதில், கடந்த சில ஆண்டாக தொய்வு ஏற்பட்டுள்ளது. பல பேர், தாங்கள் வசிக்கும் ஓடை புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலத்திலேயே பட்டா கேட்கிறார்கள்.
கோவையில் நீர்நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டது. ஆட்சேபகரமான வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடத்தில், அதாவது அடுக்குமாடி வீடு வழங்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பல்வேறு ஆய்விற்கு பின்னர் இலவச மனை பட்டா வழங்கப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் தொகைக்கு இடம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஆனாலும், பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்க, இடம் தேடும் பணி நடக்கிறது. வரும் காலங்களில் கூடுதலாக பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.