மதுராந்தகம்: மதுராந்தகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை, எம்பி செல்வம் தொடங்கி வைத்தார். மதுராந்தகம் நகராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், வட்டார சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நகரமன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற துணை தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் பிரியா வரவேற்றார். எம்பி செல்வம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, 15 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம், முதலமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்ற 20 பேருக்கு மருந்து, மாத்திரைகள், கலைஞரின் கண்ணொளி திட்டம் மூலமாக 10 மாணவர்களுக்கு கண் கண்ணாடி, 12 தொழுநோயாளிகளுக்கு காலணிகள் ஆகியவற்றை வழங்கினார்.பின்னர், அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்பாடு செய்த ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது, சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்கு சூரணம், மாத்திரைகள் வழங்கினார். அப்பகுதி, கிராம மக்கள் 800க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மகப்பேறு மருத்துவம் ஆகிய சிகிச்சை அளித்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகர திமுக செயலாளர் குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு, மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர்கள் கோமதி பிரபா, சித்ரா கங்காதரன், சசிகலாதேவி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். …