வருசநாடு, நவ. 27: கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தேங்காய் ரூ.10லிருந்து ரூ.13க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து வருசநாடு விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் காங்கேயம், ஒட்டன்சத்திரம், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேங்காய் ஏற்றுமதி வழக்கமாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக தேங்காய் விலையும், ஏற்றுமதியும் குறைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்’’ என்றனர்.