Sunday, June 16, 2024
Home » வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, வசூல் செய்யும் முன்பு வணிகர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, வசூல் செய்யும் முன்பு வணிகர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

by kannappan

சென்னை: வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, வசூல் செய்யும் முன் வணிகர்கள் தாங்களாகவே முன் வந்து வரி செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி  வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள  வணிகவரித்துறை அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களுக்கு விருதுகளும், துறை ரீதியாக பணிகளுக்கு வாகனங்களும் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வணிகவரித்துறை அலுவலர்களுக்கு 18 வாகனங்களையும், பதிவுத்துறை அலுவலர்களுக்கு 20 வாகனங்களையும் வழங்கினார். மேலும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், அலுவலர்களுக்கு கையடக்க மடிக்கணினி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசு கோப்பைகளும்  மற்றும் விபத்து ஏற்படாமல் வாகனங்கள் இயக்கிய ஓட்டுநர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிகிறது. இனி வரும் காலங்களில் வணிகவரி துறை மற்றும் பதிவு துறை வருவாய் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு வணிகவரித்துறையிலும், பதிவுத்துறையிலும் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கொள்கையை பொறுத்தவரை கலைஞர் வழியிலே முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சார்பதிவாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே  இதில் முழுமையாக நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணிக்க 50 ஆக இருந்த வாகனங்கள் 100 வாகனங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுப்போம் என சென்ற ஆண்டே கூறி இருந்தோம். அதன் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து, வசூல் செய்யும் முன் தாமாகவே முன் வந்து செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.* மேலும் 475 சார்பதிவாளர் அலுவலகமும் சனிக்கிழமைகளில் இயங்க நடவடிக்கைஅமைச்சர் மூர்த்தி கூறுகையில், ‘‘பொதுமக்களின் வசதிக்கேற்ப விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் முதற்கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் முழுவதும் மீதமுள்ள 475 சார்பதிவாளர் அலுவலகங்களிலும்  விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….

You may also like

Leave a Comment

nine + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi