விருதுநகர், மார்ச் 9: விருதுநகரில் வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவர் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஸ்குமார்(24), ரஜினிஸ்வரி(23) இருவரும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் 17.2.2019ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்து உறவினர் மூலம் விருதுநகர் இந்திரா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி உள்ளனர். பிப்.2021ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த உடன் ரஜினிஸ்வரி குடும்பத்தினர் சீர்வரிசை கொடுத்துள்ளனர். மாமியார் ஆதிலட்சுமி(45) மேலும் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை வாங்கி வரவில்லை என்றால் வேறு பெண் பார்ப்போம் என மிரட்டி உள்ளார். மேலும் சொந்தமாக பழக்கடை வைக்க வேண்டும் ரூ.5லட்சம் பணம், 10 பவுன் நகை வாங்கி வரவேண்டுமென தாக்கி உள்ளனர்.
பழக்கடையில் வேலை பார்க்கும் சதீஸ்குமார், கடையின் மாடியில் உள்ள பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு மனைவி ரஜினிஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மதுரையில் உறவினர் வீட்டில் வசித்து வரும் ரஜினிஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சதீஸ்குமார், ஆதிலட்சுமி இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.