செய்யூர், மே 20: செய்யூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக வாலிபர் பூச்சி மருந்து குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஆக்கினாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் நாகராஜ் (30). விவசாய டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஏழு வருடங்களாக வயிற்றுப்புண் காரணமாக வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்தவர் வீட்டிலிருந்த கடல்பாசி பூச்சி மருந்தினை உட்கொண்டுள்ளார். இதனால், சுயநினைவற்று இருந்த நாகராஜை அவரது உறவினர்கள் மீட்டு பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று விடியற்காலையில் நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi