பந்தலூர், மார்ச் 25: பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் காட்டு தீ பரவியது. நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் செடி, கொடிகள், புற்கள் காய்ந்து நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் ஆங்காங்கு காட்டு தீ ஏற்பட்டு அரியவகை மூலிகை செடிகள், அரியவகை வன விலங்குகள், ஊர்வன, பறவைகள் காட்டு தீயில் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிதர்க்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மழவன் சேரம்பாடி பகுதியில் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் வன நிலங்கள் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.