வத்தலக்குண்டு, செப். 27: வத்தலக்குண்டுவில் திண்டுக்கல் சாலையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாலையின் நடுவில் இருந்தது. பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வேண்டுகோளை ஏற்று வத்தலக்குண்டு மின்வாரியத்தினர் சாலையில் இருந்த மின் கம்பங்களை சாலையோரமாக மாற்றியமைத்தனர். அதேபோல வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் காளியம்மன் கோயில் முதல் பஸ் நிலையம் வரை பல இடங்களில் மின்கம்பங்கள் சாலை நடுவில் உள்ளது. அவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரை மாறன் ஆகியோர் வத்தலக்குண்டு மின்வாரியத்திற்கு மனு செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட மின்வாரியம் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க அனுமதி அளித்தது. அதைதொடர்ந்து முதல் கட்டமாக காளியம்மன் கோயிலில் இருந்து வேட்டுவர் தெரு வரை உள்ள மின்கம்பங்கள் அகற்றும் பணிகள் நடைபெறும் என்றும் அதற்கு பொதுமக்களும், கடை வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.