வத்தலக்குண்டு, நவ. 5: வத்தலக்குண்டுவில் மதுரை சாலையில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி, சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்பு இருந்த வேகத்தடைகள் தமிழக கவர்னர் ஆர்என் ரவி கொடைக்கானல் வருகையையொட்டி அகற்றப்பட்டது. கடந்த 2 மாதங்களாக வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பள்ளிகள் முன்பு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் இதுகுறித்த செய்தி, படம் தினகரன் நாளிதழிலும் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரை மாறன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் பள்ளிகள் முன்பு மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறையினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.