கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் ஒரு பெண் இன்ஜினியரிடம் போலீஸ்காரராக நடித்து 10 சவரன் நகை பறித்த வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் கடந்த மாதம் காரில் வந்த ஒரு பெண் இன்ஜினியரிடம் மஃப்டி போலீஸ் எனக் கூறி, ஒரு மர்ம நபர் வழிமறித்து நிறுத்தினார். பின்னர் உங்களிடம் ஓட்டேரி எஸ்ஐ விசாரிக்க வருகிறார். நீங்கள் அணிந்துள்ள நகைகளை ஒரு பையில் போட்டு கொடுங்கள். அவர் வந்து சென்றதும் என கூறி, அப்பெண்ணிடம் 10 சவரன் நகைகளை வாங்கிக்கொண்டார். அதேபோல் அவ்வழியே வாகனத்தில் வந்த வாலிபரை மிரட்டி, 15 சவரன் நகைகளை வாங்கிக்கொண்டு, அந்த மர்ம நபர் பைக்கில் தப்பி சென்றுவிட்டார்.இப்புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து, போலீசாக நடித்து நகை பறித்து சென்ற வாலிபரை பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது. பின்னர் நேற்று மாலை அந்த மர்ம நபரை பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம், சின்ன காப்பான் குளம் கிராமத்தை சேர்ந்த சிவராமன் (40) என்பதும், இதேபோல் போலீசாக நடித்து பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….