கீழ்பென்னாத்தூர், அக்.20: கீழ்பென்னாத்தூரில் உள்ள வங்கியில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கணினி, பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர்- வேட்டவலம் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே வங்கியின் ஏடிஎம் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில், இந்த வங்கியில் இருந்து திடீரென புகை வெளியே வந்து கொண்டிருந்தது. வங்கியின் அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், பொருட்கள் தீயில் கருகுவதால் ஏற்பட்ட துர்நாற்றத்தை உணர்ந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது, வங்கியில் உள்ள அறையில் தீப்பற்றி புகை வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது, வங்கி காசாளர் அறையில் பொருட்கள் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. உடனே, ஜன்னல் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து, வங்கியின் முன்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று, சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். ஆனாலும், அறையில் இருந்த கணினி, பணம் எண்ணும் எந்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியது.
இதற்கிடையில், தகவலறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்த இதர ஆவணங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி எடுத்து சென்றனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பின. விசாரணையில், காசாளர் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தீ விபத்து காரணமாக வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, அவரச தேவையுள்ளவர்கள் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கிளை வங்கியில் பணபரிவர்த்தனை செய்து கொள்ளுமாறு வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.