சென்னை: வங்கி கணக்குகள் முடக்கம் போன்ற அமலாக்கத்துறையின் செயல்கள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்தாது என்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கூறியுள்ளது. பாப்புலர் ப்ரண்ட்டின் தேசிய பொதுச் செயலாளர் அனிஸ் அஹமது அளித்த பேட்டி: பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் தற்காலிகமாக முடக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயக குரல்களையும் ஒடுக்குவதற்கு அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாக இதுபோன்ற ஏஜென்சிகள் செயல்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகிறது. நாங்கள் ஒவ்வொரு பைசா நிதி வசூலையும் ஏற்கனவே வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த அமைப்பானது ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு சிறிய மற்றும் பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுவதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளது. இந்த அமைப்பை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் சிக்க வைப்பதற்கான ஒரே காரணம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அமலாக்கத்துறையின் இதுபோன்ற செயல்கள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்தாது. இந்த தடைகளை முறியடிக்க அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் ஆராய்வோம். இவ்வாறு அவர் கூறினார். …