ஈரோடு,பிப்.16: ஈரோடு வஉசி பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் நன்கொடை செலுத்த வசதியாக கியூ ஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் இந்த சமய அறநிலையத்துறையின் மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அனுமன் ஜெயந்தி, வாரந்தோறும் சனிக்கிழமை, அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வர்.
இந்த கோயிலில் பக்தர்கள் அன்னதானத்திற்கும்,கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை செலுத்துவோர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்கும், அன்னதானத்திற்கும் நன்கொடை அளிக்க புதிதாக அறநிலையத்துறை சார்பில் கியூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டு, கோயிலில் ஆங்காங்கே பக்தர்களுக்கு தெரியும்படி ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், நன்கொடை ரசீது வழங்கும்போது பக்தர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அறநிலையத்துறை சார்பில் கியூஆர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு, நன்கொடை அளித்த சில விநாடிகளிலேயே அவர்களது செல்போன் எண்ணிற்கு நன்கொடையின் விவரம், ரசீது போன்றவை குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும் என்றனர்.