சென்னை: லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலை கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால் அவர் திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அவருக்கு பதிலாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்று மணமக்களை வாழ்த்தினார். இதேபோல் சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்வர் செல்லவில்லை. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் அவரை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், முதல்வர்தொடங்கி வைப்பதாக இருந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவல்: தமிழக முதல்வர் 20ம் தேதி (இன்று) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், 21ம் தேதி(நாளை) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே, இந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….