லால்குடி, மே 19: லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கும் பணியை சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நுழைவு வாயிலில் இருந்து பள்ளி வளாகம் விளையாட்டு அரங்கம் வரை மாணவர்கள், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு சிமெண்ட் நடைபாதை அமைக்க வேண்டும் என தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செளந்தரபாண்டியன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடைபாதைகள் அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்சியில் லால்குடி செளந்தரபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிமெண்ட் நடைபாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் அறச்செல்வன், நகராட்சி ஆணையர் குமார், நகர்மன்ற உறுப்பினர் ராதிகா முருகன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமா ஏஞ்சல் மேரி, துணைதலைவர் பகவான் கண்ணன், கல்வியாளர் கிறிஸ்துராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.