மதுக்கரை,மார்ச்3: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கோப்பாத்திபுரம்,சூர்யா நகர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரின் மகன் குணால் (20).இவர் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு துறை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன் தினம் குணால் தனது நண்பரின் பைக்கை வாங்கி பயன்படுத்தியதாக தெரிகிறது.
பின்னர் நேற்று காலை கல்லூரி விடுதியில் உள்ள தனது நண்பரிடம் பைக்கை கொடுக்க சென்றுள்ளார்.
அவர் ஒக்கிலிபாளையத்திலிருந்து மயிலேறிபாளையம் செல்லும் சாலையில் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மீது குணால் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் குணால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலந்துறையை சேர்ந்த தனியார் கல்லூரி டிரைவர் மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.