திருவள்ளூர்: லாரியில் இருந்து தளவாட பொருட்கள் விழுந்ததில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பொக்லைன் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பூந்தமல்லி அடுத்த படூர் பகுதியில் இருந்து நிறுவனத்துக்கு கன்டெய்னர் லாரி மூலம் பொக்லைன் இயந்திரம் தயாரிப்பதற்கு தேவையான தளவாடங்களை கொண்டுவந்தனர். மணவாளநகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது தளவாடங்கள் சரிந்து விழுந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததில் அந்த கார் நொறுங்கியது. ஆனால் ஆட்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணவாளநகர் போலீசார் சென்று விசாரித்தனர். சேதம் அடைந்த காரின் உரிமையாளர் ராஜேஷ்(27) போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் இருந்து போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வந்துள்ளார். டிபன் சாப்பிடுவதற்காக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். லாரியில் தடவாளங்களை முறையாக கட்டாமல் கொண்டு வந்ததால் வேகத்தடையில் லாரி ஏறும்போது கீழே விழுந்துள்ளது என்று தெரியவந்தது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …