அவனியாபுரம், டிச. 31: மதுரை விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து தனியார் பயணியர் விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் 1.436 கிலோ எடையுள்ள தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.97 லட்சத்து 62 ஆயிரம் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, தங்கக்கட்டியை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.