கரூர்: கரூர் ராயனூர் தாந்தோணிமலை சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே வெங்கடேஷ்வரா நகர்ப் பகுதிகள், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இந்த ச £லையில், சாலையில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையில், இலங்கை தமிழர்கள் முகாம் பகுதிக்கு சாலை பிரியும் இடத்தில் வடிகால் பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தொடர் கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகன போக்குவரத்து காரணமாக தற்போது, வடிகால் பாலம் சிதிலடைந்து, பள்ளம் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை கடந்து செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். பாலத்தின் மோசமான தன்மை காரணமாக விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை வடிகால் பாலத்தை பார்வையிட்டு, இதனை சீரமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.