ராயக்கோட்டை, ஜூன் 8: ராயக்கோட்டை பகுதியில் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. ராயக்கோட்டை பகுதியில், விவசாயிகள் அதிக அளவில் செண்டுமல்லி பூவை சாகுபடி செய்துள்ளனர். ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்காக மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட செண்டுமல்லி, தற்போது வருடம் முழுக்க சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல விலையும் கிடைத்து வருகிறது. கடந்த மாதங்களில் கிலோ ₹50க்கும் குறைவாக விற்றதால், பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாது என விவசாயிகள் அப்படியே தோட்டங்களில் விட்டு வைத்தனர். இந்நிலையில், நடப்பு மாதம் முகூர்த்தங்கள் ஆரம்பமாகியுள்ளதால் பூக்களை பறிப்பதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மார்க்கெட்டில் தேவை அதிகரிப்பின் காரணமாக, செண்டுமல்லி விலையும் உயர்ந்து கிலோ ₹200க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.