காரைக்கால்,பிப்.4: காரைக்காலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த நித்திஸ்வரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நித்ய கல்யாணி சமேத நித்திஸ்வரர் சுவாமி கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நித்திஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பைரவர் மூர்த்திகளுக்கு முத்தங்கி அணிவித்து சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தை மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டனர்.