Thursday, May 16, 2024
Home » ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது பெண்ணின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: போலீசார், விஏஓ விசாரணை

ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது பெண்ணின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: போலீசார், விஏஓ விசாரணை

by Ranjith

 

சென்னை, ஜன.8: சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து இருந்து துப்பாக்கி குண்டு பெண்ணின் உடலில் பாய்ந்து காயம் ஏற்பட்டது. இது குறித்து புகாரின்பேரில் போலீசார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அருகே ராணுவ பயிற்சி முகாமிலிருந்து நேற்று முன்தினம் பயிற்சியின்போது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு ஒரு பெண்ணின் உடலை உரசியபடி சென்றது.

இதனால், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல், அந்த கிராமத்தில் அதிகளவு துப்பாக்கி குண்டு சிதறி கிடப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் இந்திய ராணுவ படையின் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களை முறையாக இயக்குவதற்கு கடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவ முகாமில் வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒரு வீரரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு, முகாமுக்கு வெளியே 3 கிமீ தூரத்தில் நடந்து சென்ற சென்னேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி உடலை உரசியபடி சென்றது. இதனால், அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சென்னேரி கிராமத்துக்கு செங்கல்பட்டு வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து விசாரித்தனர்.

இதுபற்றி சென்னேரி கிராம மக்கள் கூறுகையில், ‘‘ராணுவ முகாமில் பயிற்சியின்போது துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டுகள் சிதறி, எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களையும் துளைத்து வருகிறது. மேலும், தெருக்களிலும் குண்டு சிதறல்கள் பரவி கிடக்கிறது. தற்போது ஒரு பெண்ணுக்கு குண்டு சிதறலால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று வலியுறுத்தினர். இப்புகாரின்பேரில் போலீசார் மற்றும் விஏஓ விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi