சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்தோறும் 3 ஆயிரம் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய கர்ப்பகால நீரிழிவு விழிப்புணர்வு தினம் மற்றும் உலக சிறுநீரக நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து, இதய ரத்த குழாய்களை மிகத் துல்லியமாக ஆய்வு செய்யும் அதிநவீன கருவியினை திறந்து வைத்தார். அதேபோல், கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு ரத்த பரிசோதனை கருவிகளை வழங்கினார். சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீரிழிவு நோய் நிபுணர் சேஷையா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்தோறும் 3000 டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் சுமார் 100 நோயாளிகள் தொடர் பெரிட்டோனியல் டயாலிசிஸ் சிகிச்சை முறை மேற்கொண்டு வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான டயாலிசிஸ் திரவப்பைகள் அவர்களது வீட்டிலேயே வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 927 நபர்கள் முதன் முறை சிகிச்சை பெற்றவர்கள். மேலும் 1310 பேர் தொடர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றவர்கள். இவ்வாறு அவர் கூறினார். …