பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.26: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்திலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வருவோர் பொம்மிடி ரயில்நிலையத்தில் இருந்து பயணம் செய்து வருகின்றனர். இதனால், பொம்மிடி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், ஆலப்புழாவில் இருந்து சேலம் வழியாக தான்பாத் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை பொம்மிடி ரயில் நிலையம் வந்தது.
அப்போது, ரயிலின் மேற்கூரை மீது 45 வயது மதிக்கத்தக்க நபர் உட்கார்ந்திருந்ததை கண்டு பயணிகள் திடுக்கிட்டனர். இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, ரயில் கூரை மீது அமர்ந்திருந்த நபரை மீட்டனர். பின்னர், அவரை அதே ரயிலில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்து சுமார் 10 நிமிடம் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் பொம்மிடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.