ஈரோடு, மே 21: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் உள்ள சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இப்பணிகளால், சாக்கடைகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள சாக்கடை அடைப்புகள் சரி செய்யப்பட்டு, மாநகராட்சி வாகனம் மூலம் தேங்கி நின்ற கழிவு நீர் உறிஞ்சப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் திட்டப்பணியை விரைந்து முடித்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.