திருவொற்றியூர்: திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இங்கு ரூ.30 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள வீடு மற்றும் கடைகளை இடிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் நேற்று காலை அங்கு வந்து, சாலையோரத்தில் உள்ள வீடுகளை அகற்ற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கே.பி.சங்கர் எம்எல்ஏ, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர், உடனடியாக கடைகள் மற்றும் வீடுகளை அப்புறப்படுத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். எனவே சுரங்கப்பாதை பணிக்கு தேவையான இடங்களை மட்டும் கால அவகாசம் கொடுத்து இடிக்க வேண்டும். மற்ற இடங்களை அப்புறப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம், என ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை பணிக்கு தேவையான சாலையோரத்தில் உள்ள கடைகளை மட்டும் அவகாசம் கொடுத்து இடிப்பது என தீர்மானித்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்….
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு வீடு, கடைகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: மாற்று இடம் வழங்க கோரிக்கை
previous post