சென்னை: ரயில்களில் பெண்களிடம் நகை பறித்து வந்த 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கு செல்லும் புறநகர் ரயில்களில் பயணிக்கும் பெண் பயனிகளிடம் நகை பறிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, திருவள்ளூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசலு, பாரதி மற்றும் போலீசார் திருவள்ளூர், புட்லூர், செவ்வாப்பேட்டை மற்றும் திருநின்றவூர் வரையிலும், அதேபோல் ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சிபானம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது ரயிலில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் பெண் பயணிகளிடம் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள், அம்பத்தூர் பாக்கியலட்சுமி தெருவை சேர்ந்த கவுரிசங்கர் (22), திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த ரயில்வே போலீசார், அவர்களிடமிருந்து 7 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….