திருச்சி, ஏப்.22: ரம்ஜானை முன்னிட்டு திருச்சி மாநகரில் காவல் ஆணையர் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பெருமளவில் பொதுமக்கள் கூடும் விழாக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அசாம்பாவிதம் நடைபெறாமலும், பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டுமென மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார்.
ரம்ஜானை முன்னிட்டு திருச்சி மாநகரில் 99 பள்ளிவாசல்களிலும், 24 திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் கூட்டு தொழுகை நடைபெறவுள்ளது. திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடவும், குற்ற சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 124 வழிபாட்டு இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் போதுமான காவலர்கள் பணியிலிருந்து விழிப்புடன் பணிபுரியவும் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு ஒரு உதவி ஆணையர் மேற்பார்வையில் 10 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 89 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும் மரியாதைக்குரிய திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில், 2 காவல் துணை ஆணையர்கள், 7 காவல் உதவி ஆணையர்கள், 38 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திரட்டப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.