மதுரை, ஆக. 25: ராமேஸ்வரம் முதல் சென்னை வரை ரத்ததானத்தை வலியுறுத்தி, ஆட்டோவில் பயணம் செய்து வரும் வாலிபருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரத்ததானம் என்பது மற்ற உயிர்களை காப்பாற்றும் ஓர் அரிய சேவையாகும். ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதரும் தங்கள் வாழ்வில் 300 முதல் 350 மில்லி கொண்ட ஒரு யூனிட்டாக தானமாக வழங்க முடியும். இது இரண்டே வாரங்களில் அவர்களுக்கு மீண்டும் உற்பத்தியாகிவிடும். இருப்பினும் ரத்ததானம் செய்வதில் பலரும் ஆர்வமாக இல்லாத நிலை தொடர்கிறது. எனவே ரத்ததானத்தை வலியுறுத்தி பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற வாலிபர், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்கிறார். கடந்த 21ம் தேதி தொடங்கிய இவரது பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மதுரை வந்தார். மதுரை, காந்தி மியூசித்தில் அவருக்கு மியூசிய செயலாளர் நந்தாராவ், மதுரை நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் மற்றும் சமூக ஆர்வலவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சாகுல் ஹமீது ரத்ததானம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கோவைக்கு புறப்பட்ட அவரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.