மும்பை: தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரான சரத் பவார், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாதி தொகுதியை ‘இந்தியா’ கூட்டணி வெல்லும். மோடிக்கு நம்பிக்கை குறைந்து வருவதால், அவர் மகாராஷ்டிராவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். முன்பெல்லாம் நேரு, இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள், ஓரிரு தேர்தல் பேரணிகளில் மட்டுமே உரையாற்றினார்கள். ஆனால் மோடி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராக முடியும் என்றால், ஒரு அரசியல்வாதியின் மகன் ஏன் அரசியல்வாதியாக முடியாது? ஒவ்வொருவரின் வெற்றியும் தோல்வியும் அவரவர் திறமையைப் பொறுத்தது.
பெற்றோரின் தொழிலையோ, பணியையோ பின்பற்றுவது குற்றமல்ல. தேர்தலில் 400 சீட்களை தாண்டுவோம் என்று பாஜக கூறுகிறது. எந்த அடிப்படையில் இந்த கோஷம் எழுப்பப்படுகிறது என்பது தெரியவில்லை. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். தென் மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்திலும் குறைந்த இடங்களை தான் கைப்பற்றும். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசும் விதம், பிரதமர் பதவியின் கண்ணியத்திற்கு எதிரானது’ என்றார்.