அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம், முத்தமிழ் நகர், 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிப்பவர் பாலாஜி (38), கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவி வாசுதேவி (32). நேற்று முன்தினம் மதியம் பாலாஜி, வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவியுடன் கானத்தூரில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு சென்றார். அங்கிருந்து இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதி, பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த 52 சவரன் நகைகள், ரூ.1.90 லட்சம் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் வசிக்கும் ஏ.சி மெக்கானிக் சந்திரசுதன் (எ) ராஜா (32) மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் டூப்ளிக்கேட் சாவி தாயரித்து பாலாஜி வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன், பாலாஜி தனது வீட்டின் முன் கதவை திறந்துவிட்டு சாவியை மறந்து கதவிலேயே விட்டு சென்றுள்ளார். இதை பார்த்த சந்திரசுதன், அந்த சாவியை எடுத்து அச்சு பதித்துவிட்டு, மீண்டும் அந்த சாவியை கதவில் வைத்துள்ளார். பிறகு, யுடியூப் வீடியோக்கள் பார்த்து, டூப்ளிக்கேட் சாவி தயாரித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி மற்றும் மனைவி வாசுதேவி ஆகிய இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில், டூப்ளிக்கேட் சாவி மூலம் பூட்டிய கதவை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து உள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இவருக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாததால், குடும்பம் நடத்த சிரமப்பட்டுள்ளார். இதனால், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார், சந்திரசுதன் மறைத்து வைத்திருந்த 52சவரன், ரூ.1.90 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். …