ஒடுகத்தூர், ஜன.25: ஒடுகத்தூர் அருகே வீட்டில் இருந்த மைனர் பெண் வாலிபரால் கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மைனர் பெண் திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அந்த புகாரில், வீட்டில் இருந்த தனது மகளை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளதாகவும், இதனால் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகாரில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, போலீசார் வழக்குப்பதிந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் மைனர் பெண்ணையும், வாலிபரையும் தேடி வருகின்றனர்.