மேலூர், டிச. 19: மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மதுரை புறநகர் மாவட்டம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிஎச்எச் குடும்ப அட்டையை, ஏஏஒய் குடும்ப அட்டையாக மாற்றக்கோரி, மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று குடியேறும் போராட்டம் நடத்தினர். இதற்கு மேலூர் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகிக்க, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன் வரவேற்றார்.
என்பிஆர்டி அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தவமணி, மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சின்னகருப்பன், மேலூர் ஒன்றிய தலைவர் கண்ணன், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் புரோஸ்கான், துணை தலைவர் ராஜாமணி, பொருளாளர்கள் நண்பர், சுமதி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன், தனசேகரன், ஆனந்த், ராஜேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான குடும்ப அட்டை, ஒரு மாதத்திற்குள் வகை மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும் என தாசில்தார் செந்தாமரை உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.