மேலூர், ஜன.31: மேலூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கபடி விளையாட்டு மைதானத்தை எம்பி வெங்கடேசன் துவக்கி வைத்தார். மேலூர் அருகே ஆமூர் ஊராட்சியில் ஏராளமான கபடி வீரர்கள் உள்ளனர். இவர்கள் தாங்கள் பயிற்சி மேற் கொள்வதற்காக விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என எம்பி வெங்கடேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் ஆமூரில் அமைக்கப்பட்ட கபடி விளையாட்டு மைதானத்தை நேற்று முன்தினம் இரவு சு.வெங்கடேசன் எம்பி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற கபடி போட்டியில், இளைஞர்களுடன் சேர்ந்து எம்பியும் சிறிது நேரம் கபடி விளையாடி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் ஆமூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி சந்தானம், துணை தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.