வேலூர், ஏப்.13: வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய மேலும் ஒரு சிறுவன் சேலத்தில் சரணடைந்தான். வேலூர் காகிதப்பட்டறையில் அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு 21 வயதுக்குள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். 42 பேர் தங்கியுள்ள இப்பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 பேர் கடந்த 27ம் தேதி இரவு பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பினர். இதையடுத்து தப்பிச்சென்ற 6 பேரை பிடிக்க தனிப்படை போலீசார், சிறுவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையங்களுடன் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனர். கடந்த 1ம் தேதி காலை சென்னையில் பதுங்கி இருந்த ஒரு இளம் சிறுவன், அன்று இரவு சென்னை மணலியில் கடையில் திருட முயன்ற 2 சிறுவர்கள், கோடம்பாக்கத்தில் திருட முயன்ற ஒரு சிறுவன் என 4 பேர் சிக்கினர். பிடிபட்ட 4 பேரில் 2 பேர் சென்னை கெல்லீஸிலும், ஒருவர் சென்னை புழல் சிறையிலும், ஒருவர் மீண்டும் வேலூர் பாதுகாப்பு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இதுதவிர தப்பிய மேலும் 2 பேரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் சேலம் இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு நேற்று முன்தினம் ஒருவன் சரணடைந்தான். மற்றொருவனை தேடி தனிப்படையினர் திருநெல்வேலி விரைந்துள்ளனர்.