செங்கல்பட்டு: மேலமையூர் ஊராட்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், மேலமையூர், ஆலப்பாக்கம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமையூர் காலனி, லட்சுமிநகர், ரகமத் கோல்டன் சிட்டி, ரோஜா கார்டன், சாய் நகர், சக்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 2000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பிள்ளைகள் 1500க்கும் மேற்பட்டோர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் தனியாக சைக்கிளிலோ அல்லது பெற்றோருடன் பைக்கிலோ பள்ளிக்கு செல்வது வழக்கம்.கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால், பள்ளிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. இச்சாலை வழியாக, பைக்கில் பெற்றோருடன் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வண்டி சக்கரம் சேற்றில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதனால், சில நேரங்களில், வாகன ஓட்டிகள், அவருடன் செல்பவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் நிலை தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், சக்திநகர் பிரதான சாலையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், மெகா பள்ளங்கள் உள்ளன. எனவே, இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், உயிர் பயத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து, சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மணிவண்ணன், 8வது வார்டு உறுப்பினர் சந்திரகாந்த் ஆகியோர் கூறுகையில், செங்கல்பட்டு நகர் பகுதிக்கு அடுத்து இந்தபகுதியில் புதிதாக வீடுகட்டி, ஏராளமானோர் குடியேறி வருகிறார்கள். செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் இருந்து சக்திநகர் (வளைவு) நுழைவாயிலில் கார், பைக் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள், நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர். செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், ராட்டிண கிணறு முதல் திருப்போரூர் கூட்ரோடு வரை சாலைகளின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். முக்கியமாக வளைவு மற்றும் சக்திநகர் பிரதான சாலை முதல் தனியார் பள்ளி வரை சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தரமான சாலை அமைத்து தரவேண்டும். மழைகாலங்களில் மழைநீர் வடிந்து செல்ல கால்வாய் வசதி செய்து தரவேண்டும் என்றனர்….
மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமாகி சேறும் சகதியுமான சாலைகள்: பொதுமக்கள் கடும் அவதி
previous post