வேளச்சேரி, ஏப்.29: கிழக்கு கடற்கரைச் சாலை, உத்தண்டி விஜிபி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்குமார் (40). இவர் நேற்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மெயின் ரோடு வழியாக சொகுசு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5 மணியளவில் மேடவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்றபோது வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பாக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்தது.
அப்போது காரில் இருந்த பலூன் அதிர்ஷ்டமாக திறந்ததால் கிரீஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் காருக்குள் சிக்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரில் சிக்கிய கிரிஷ்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு வாகனம் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அகற்றினர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.