சென்னை, செப். 7: ஆந்திர மாநிலம், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி (21). பி.காம் பட்டதாரி. இவர் சென்னையில் தங்கியிருந்து தனியார் கால்சென்டரில் பணியாற்றி வந்தார். கடந்த 3ம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் தோழியின் சகோதரி திருமணத்தில் கீர்த்தி பங்கேற்றார். பின்னர், தனது உறவினர் ராபர்ட் (21) என்பவருடன் ஆந்திராவில் உள்ள வீட்டுக்கு கீர்த்தி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கரடிப்புத்தூர் அருகே சிறுபாலத்தில் பைக் ஏறி இறங்கும்போது, சாலையோர பள்ளத்தில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீர்த்திக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது உறவினர் ராபர்ட் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, படுகாயம் அடைந்த கீர்த்தியை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நேற்று முன்தினம் மாலை கீர்த்திக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவரது பெற்றோரின் சம்மதத்துடன் கீர்த்தியின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், நுரையீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டது.