தோகைமலை, ஏப்.2: தோகைமலை அருகே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் கல்லடை ஊராட்சி கீழவெளியூர் அருகே உள்ள கல்லடை கைகாட்டி பழனியப்பன் மனைவி சிறும்பாயி (70). இதேபோல் கீழவெளியூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பமுத்து (75). இவர்கள் இருவரும் உறவினர்கள். இதில் சிறும்பாயிக்கு சொந்தமான நிலத்தை குப்பமுத்து பெயருக்கு மாற்றியது சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி சிறும்பாயி தனது வீட்டின் வாசலில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த குப்பமுத்து மீண்டும் நிலப்பிரச்னையை எழுப்பி தகாத வார்த்தைகளால் திட்டி குச்சியால் சிறும்பாயியை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த சிறும்பாயி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறும்பாயி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குப்பமுத்து மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.