கந்தர்வகோட்டை, டிச.24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை இந்திராநகர் பகுதிகளில் மூங்கில் கூடை, சவுக்கு கூடை பின்னும் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் கூறுகையில்,
முன்பு போல கூடை பின்னும் மூங்கில் சிம்புகள், தைல மர நைஸ் குச்சிகள், சவுக்கு குச்சிகள், ஈச்சமர குச்சி தற்சமயம் கிடைப்பது இல்லை எனவும் கூடை பின்னும் தொழில் நலிவுற்று வருவதாகவும் இளைஞர்கள், இளம் பெண்களும் இந்த தொழில்நுட்பதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என கூறுகிறார்கள்.
நெல், கடலை, தானிய வகைகளை கூடையில் அள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயற்கையான தாவரங்களிலிருந்து பின்னும் கூடைகளுக்கு உயிர்த்தன்மை இருப்பதாக எண்ணி விதை நெல், உளுந்து, எள் போன்ற விதைப்பொருட்களை விதைக்கும்போது இன்றும் கூடைகளை பயன்படுத்தி வருகிறார்கள். திருமணம், சடங்கு, கோயில் திருவிழாவிற்கு சோறு வடிக்ககூடை பயன்படுத்தி வந்தனர். நாகரிக காலத்திற்கு ஏற்ப பாத்திரங்களை பயன்படுத்துவதால் கூடை விற்பனை குறைந்துள்ளது. கூடை பின்னும் தொழிலை காக்க அனைத்து திருமண மண்டபங்களிலும், திருவிழாக்களிலும் சோறு வடிக்கும் போது மூங்கில் கூடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் கூடை பின்னும் தொழில் சிறப்பு அடையும் என தெரிவித்தனர்.