விருதுநகர், மார்ச் 20: தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நல்ல திடகார்த்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படைவீரர்களுக்கு தினசரி உணவுப்படி, அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்காக 65 வயதிற்கு உட்பட்டோர் ஈடுபடுத்தப்படுவர். விருப்பமுள்ள திடகார்த்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வருகை தந்து பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.