முத்துப்பேட்டை, ஆக. 27: முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கோரையாற்றிலிருந்து பிரிந்து வங்கநகர், ஓவர்குடி, பாண்டி, குன்னலூர், கீழப்பெருமழை, மேலபெருமழை வழியாக சென்று கரையங்காடு அருகே செல்லும் வளவனாற்றில் கலக்கும் வடிகால் ஆறு இந்த கிராமங்களின் வடிகாலாகவும், பாசன ஆறாகவும் பயன்பட்டு வருகிறது. இந்தநிலையில் சமீபகாலமாக இந்த வடிகால் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தை தடுக்கும் வகையில் மண்டிக்கிடந்தது.இதனால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில், இந்த கிராமங்கள் மூழ்கி பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.
மேலும் சிறிது மழை பெய்தாலே, இந்த கிராமத்தில் மழை நீர் வடிய வழியின்றி இருந்து வந்தது. இதனால் சாகுபடி பணிகள் முடங்கி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து இந்த வடிகால் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை கிராம மக்களே களத்தில் இறங்கி அகற்ற முன் வந்து நேற்று கீழபெருமழை – மேலபெருமழைக்கு இடையே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத்தாமரைகளை அகற்றினர். மேலும், ஆகாயத்தாமரை அகற்றும் பணி தொடரும் என்று பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.