முத்துப்பேட்டை, மே 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்ற அரசு பேரூந்தில் எடையூர் சிவராமன் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (51) என்பவர் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ஒரு சிறிய பிரேம் ஆகிவை வைத்துக்கொண்டு ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் கோபு லக்கேஜ் கட்டணம் வசூல் செய்துள்ளார். அதற்கு ராமகிருஷ்ணன் “இதற்கு போய் என்னிடம் எப்படி லக்கேஜ் வசூல் செய்யலாம்” என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் எடையூர் கடைத்தெருவில் இறங்கிய ராமகிருஷ்ணன் கட்டையால் பஸ்சி பின் பகுதி கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதனைக்கண்ட பஸ் டிரைவர் செல்வராஜ், நடத்துநர் கோபு மற்றும் அப்பகுதியினர் ராமகிருஷ்ணனை பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.