ஊட்டி, ஆக. 7: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதிகள் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். ஜனாதிபதி வருகையையொட்டி தெப்பக்காட்டை சேர்ந்த 28 பாகன்கள் மற்றும் காவடிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 10 பாகன்கள் என மொத்தம் 38 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை சந்தித்த ஜனாதிபதி, யானைகள் பராமரிக்கும் முறைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர் டெல்லியில் இருந்து கொண்டு வந்திருந்த பரிசு பொருட்களை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கினார். பின்னர் அனைத்து பாகங்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அமைச்சர்கள் மதிவேந்தன், ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.